image

மழலையராய் அவர் மடியில் ஒரு நாள்: தீவு மறைக்கல்வி மாணாக்கர்களின் 'மறைக்கல்வி மாநாடு - 2025'

தங்கச்சிமடம் | அக்டோபர் 15, 2025:


இராமேஸ்வரம் தீவு மறைக்கல்வி மாணாக்கர்களின் 'மறைக்கல்வி மாநாடு' கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12, 2025) அன்று த. சூசையப்பரப்பட்டிணம் பங்குத்தளத்தில் நடைபெற்றது. இந்த குழந்தைகள் மாநாட்டில் 1500 பேர் பங்கேற்றனர்.


இணையம் விட்டு இறைவனோடு ஒரு நாள்


காலையில் குழந்தைகள் அனைவரும் த. சூசையப்பர் பட்டினம் பங்குத்தளத்தில் உள்ள அற்புதக் குழந்தை இயேசு ஆலயத்தில் இருந்து "இணையம் விட்டு இறைவனோடு ஒரு நாள்" என்ற மைய சிந்தனையில் பதாகைகளை ஏந்தி பவணி சென்றனர். அதனை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு காதர் பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.


மழலையராய் அவர் மடியில் ஒரு நாள்


தொடர்ந்து காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புனித சூசையப்பர் பங்கு ஆலய வளாகத்தில் உள்ள மகிமை கூடாரத்தில் "மழலையராய் அவர் மடியில் ஒரு நாள்" என்ற மையச் சிந்தனையில் அனைத்து தீவு பங்குகளில் உள்ள மறைக்கல்வி மாணவர்களுக்கான ஒருநாள் கருத்தமர்வு நடைபெற்றது. கருத்தமர்வின் தொடக்கமாக "மழலையராய் அவர் மடியில் ஒரு நாள்" என்ற கொடியினை தமிழக ஆயர் பேரவையின் மறைக்கல்வி பணிக்குழுவின் செயலர் தந்தை அனலின் அவர்கள் கொடியேற்றி மாநாட்டின் நிகழ்வுகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஜெபத்துடன் அனைத்து நிகழ்வுகளும் தொடங்கின.


அதனைத் தொடர்ந்து அருள் தந்தை அனலின் அவர்கள் தனது கருத்துரையை குழந்தைகளுக்கு வழங்கினார்கள். மறைக்கல்வியில் இத்தனை மாணவர்கள் பங்கு எடுப்பதை நினைத்து பெருமை கொண்டார். தீவுப் பகுதியில் மறைக்கல்வி சுறுசுறுப்பாக ஆர்வத்துடன் நடைபெறுவதை பாராட்டினார். மாணவர்களின் ஈடுபாட்டையும் ஒத்துழைப்பையும் ஆசிரியர்களின் விடாமுயற்சியையும் பாராட்டினார். குறிப்பாக நகைச்சுவை வடிவில் குழந்தைகளுக்கு இணையதளத்தின் நன்மைகள் தீமைகள் எடுத்துரைத்தார். மறைக்கல்வியின் தேவைகளை உணர்த்தினார்.


காலை 11 மணியளவில் மேதகு ஆயர் லூர்து ஆனந்தம் அவர்கள் தலைமையில் அனைத்து தீவு தந்தையர்கள் மற்றும் அருள்பணி செபாஸ்டின்( மறைப்பணி இயக்குனர் ), அருள்பணி ஜீவன் (மறைமாவட்ட மறைக்கல்வி பணிக்குழு செயலர்,) அவர்களுடன் இணைந்து திருப்பலி ஆனது குழந்தைகளுக்காக ஒப்பு கொடுக்கப்பட்டது.


ஆயர் அவர்கள் தீவு மாநாட்டை முன்னெடுத்த தீவு தந்தையர்களையும்

குறிப்பாக த. சூசையப்பர் பட்டினம் பங்குத் தந்தையர்கள் அருள் தந்தை இன்பன்ட், அருள் தந்தை ஆன்டோபிரசாந்த் இருவரையும் பாராட்டினார். புதிய முயற்சிகளை இன்னும் தீவுப் பகுதிகளில் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மறையுறையில் கார்லோ அகுஸ்தீஸ் வாழ்க்கை வரலாற்றில் கேள்விகள் கேட்டார். அன்றைய தினம் கார்லோ அகஸ்டீஸ் அவருடைய திருவிழாவை முன்னிட்டு மறைக்கல்வி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது மிகச்சிறப்புக்குறியது என்றும் பாராட்டினார். மறைக்கல்வியின் முக்கியத்துவத்தை தன்னுடைய மறையுரையில் உணர்த்தினார்.



அருட்தந்தை செபாஸ்டின் அவர்கள் தீவு பகுதியில் பணியாற்றும் அருள் தந்தை ஆரோக்கியராஜ் அருள் தந்தை ஆன்டோ பிரசாந்த் இருவரும் தன்னுடைய மறைக்கல்வி மாணவர்கள் என்பதை சுட்டிக்காட்டி மறைக்கல்வியில் தகுந்த முறையில் பங்கெடுத்ததால் இன்று குருவானவர்களாக மாறியிருக்கிறார்கள் என்பதை உணர்த்தினார். இறை அழைத்தலுக்கு மறைக்கல்வி உந்தி தள்ளும் என்பதை உணர்த்தினார்.

மறைக்கல்வி வழியாய் ஒழுக்கத்தை கற்றுக் கொள்கிறோம் அதுதான் வாழ்வின் அடித்தளம் என்பதை உணர்த்தினார்.


பிறகு அனைத்து அருள் சகோதரிகளுக்கும் தீவு மறைக்கல்வி ஆசிரியர்களுக்கும் பங்கு பணியாளர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து மாநாட்டு கலை நிகழ்வுகள் நடைபெற்றன. இறுதியாக த. சூசையப்பர் பட்டினம் பங்கின் உதவி பங்கு பணியாளர் அருள்பணி. ஆண்டோ பிரசாந்த் அவர்கள் நன்றியுரை வழங்கி இனிதே நிறைவு செய்தார்கள்.


இந்த மாநாட்டை த. சூசையப்பர் பட்டினம் பங்கின் இளைஞர்களும் மாதா சபையினரும் மிகச் சிறப்பாக வழிநடத்தினார்கள். 35 இளைஞர்கள் மதிய உணவு பரிமாறுதலையும் 40 மாதா சபை இளம் பெண்கள் மாணவர்களை ஒழுங்குபடுத்துதலையும் சிற்றுண்டி வழங்குவதையும் மிகவும் சிறந்த முறையில் வழி நடத்தினார்கள்.


இந்த மாநாட்டில் ஆயர் அவர்களும் 1350 மாணவர்கள், 120 ஆசிரியர்கள் , 15 அருள் தந்தையர்கள் , 20 அருள் சகோதரிகள் கலந்து கொண்டனர்


இணையத்தை விட்டு இயேசுவோடு என்ற தலைப்பில் துவங்கி ஒரு நாளை மழலையராய் அவர் மடியில் செலவிடுவோம் என்ற முழக்கத்தோடு மாநாடு மாலையில் நிறைவு பெற்றது.


பங்குத்தந்தை இன்பன்ட் அவர்கள் இந்நிகழ்வு பற்றி "இந்த எழுச்சி மாநாட்டினால் தீவு மறைக்கல்வி மற்றும் மாணவர்களும் மறைக்கல்விக்கு தவறாமல் கலந்து கொள்ள முடியும் என்ற ஒரு உத்வேகத்தை கொடுக்க முடிந்தது. இன்றைய இணைய உலகத்திலே மூழ்கி கிடக்கும் பிள்ளைகளை நாம் கடவுளின் பக்கம் திருப்பினால் அவர்களின் வாழ்வு நலமாய் இருக்கும் என்பதையும் கருத்தில் கொண்டு இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தோம். இதை பார்த்த மற்ற பிள்ளைகளும் ஆர்வமாக தங்களுடைய வருகையை வரும் காலங்களிலே மறைக்கல்வி வகுப்பில் முன்னெடுப்பார்கள் என்பதை நான் நம்புகிறேன்" என்று கூறினார்.


மாநாட்டிற்காக த. சூசையப்பர் பட்டினம் பங்கு மறைக்கல்வி ஆசிரியர்கள் இரண்டு மாதங்கள் திட்டமிட்டு நேர்த்தியாக செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இவர்களை வழி நடத்திய த. சூசையப்பர் பட்டினம் பங்கு உதவி பங்கு தந்தை குறிப்பாக எல்லோராலும் பாராட்டப் பெற்றார்.


செய்தியாளர்: அருள்பணி. ஆண்டோ பிரசாந்த் JH

© 2025 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP