image

முதல் பெண்: வத்திக்கானின் தகவல் தொடர்புத் துறையின் முதல் பெண் பொதுநிலைத் தலைவராக மரியா அல்வராடோ நியமிக்கப்பட்டார்

வத்திக்கான், ஜூன் 2, 2026: திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், EWTN செய்தி நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல்பாட்டு அதிகாரியான மரியா மான்செராட் அல்வராடோவை, வத்திக்கானின் தகவல் தொடர்பு துறையின் தலைவராக (Prefect of the Dicastery for Communication) நியமித்துள்ளார். இந்த நியமனம் 2026 நவம்பர் 5 முதல் நடைமுறைக்கு வருகிறது.


அல்வராடோ 2023 முதல் EWTN செய்திகளின் உலகளாவிய மற்றும் பன்மொழி செய்தி செயல்பாடுகளை வழிநடத்தி வருகிறார். இதன் தொலைக்காட்சி, வானொலி, அச்சு, டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக தளங்களை அவர் மேற்பார்வையிட்டு வருகிறார். தனது பதவிக்காலத்தில், அந்த நிறுவனத்தின் பன்னாட்டு செய்தி இருப்பை வலுப்படுத்துவதிலும், அதன் பன்மொழி சேவைகளிடையே சிறந்த ஒத்துழைப்பை ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கு வகித்தார்.


இந்த நியமனம் குறித்து கருத்து தெரிவித்த EWTN-ன் தலைவர் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி மைக்கேல் பி. வார்சா, நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் பணிக்கான அல்வராடோவின் பங்களிப்புகளை எடுத்துரைத்தார்.


பன்னாட்டு ஊடகங்கள், பொது விவகாரங்கள் மற்றும் திருஅவை ஈடுபாட்டில் அல்வராடோவுக்கு உள்ள அனுபவம், எங்களது தூதரக பணியின் மிக முக்கியமான தருணத்தில், அதாவது எண்ணிம தளத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டை ஏற்படுத்தும் மாற்றத்தின் போது, EWTN நிறுவனத்தின் செயல்பாடுகளை வடிவமைக்க உதவியுள்ளது என்று வார்சா கூறினார். அதே சமயம், EWTN நிறுவனத்தை வரையறுக்கும் பணியில், அதாவது இயேசு கிறிஸ்துவின் உண்மையை மற்றும் திருஅவையின் போதனைகளை தெளிவு, உண்மைத்தன்மை மற்றும் அன்புடன் அறிவிப்பதில் அவர் உறுதியாக உள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.


தனது நியமனத்திற்குப் பிறகு வெளியிட்ட அறிக்கையில், அல்வராடோ இந்த செய்தியை ஆழ்ந்த நன்றியுடனும், பணிவுடனும், ஆண்டவர் மீது நம்பிக்கையுடனும் ஏற்றுக்கொள்வதாகக் கூறினார். மேலும், EWTN அமைப்பின் சாட்சியம் தனது இறை நம்பிக்கையை வலுப்படுத்தியது என்றும் குறிப்பிட்டார்.


உரோமன் நிர்வாகக் குழு சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் 2015-ஆம் ஆண்டு இந்த தகவல் தொடர்பு துறை உருவாக்கப்பட்டது. இது வத்திக்கான் செய்திகள், வத்திக்கான் வானொலி, லோசர்வதோரே உரொமானோ, வத்திக்கான் ஊடகம், வத்திக்கான் பதிப்பகம் மற்றும் அச்சுக்கூடம், பிலிமோத்தேகா வத்திக்கானா மற்றும் திருத்தந்தையின் செய்தி அலுவலகம் உள்ளிட்ட திருப்பீடத்தின் முக்கிய தகவல் தொடர்பு நிறுவனங்களை ஒன்றிணைக்கிறது.


இந்தத் துறையின் தலைவர் ஐந்து ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்படுகிறார் மற்றும் அவர் வத்திக்கானின் தகவல் தொடர்பு வலையமைப்பை மேற்பார்வையிடும் பொறுப்பைக் கொண்டுள்ளார்.


மெக்சிகோ நகரில் பிறந்த அல்வராடோ, புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகம் மற்றும் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். மத சுதந்திரம் மற்றும் திருஅவைக்கான தனது சேவைக்காக அவர் பல தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். அவரது எழுத்துக்களும் கருத்துகளும் பல்வேறு பன்னாட்டு ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன.


Courtesy & Photo credit: EWTNVatican

© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP