image

வத்திக்கான் - இறைவேண்டல் செய்வது முக்கியத்துவம் பெறவேண்டும்!

வத்திக்கான்,ஜூன் 27,2025 - கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திருஅவைகளின் பணிகளுக்கு உதவும் நிறுவனங்களின் (ROACO) ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தின் பங்கேற்பாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, அனைவரையும் அன்புடன் வரவேற்று, கடுமையான சவால்களுக்கு மத்தியில் கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திருஅவைகள் ஆற்றிவரும் அற்புதமான அர்ப்பணம் நிறைந்த பணிகளுக்காகத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டார்


கிறிஸ்தவக் கிழக்குப் பகுதிகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் போர்கள், வெறுப்பு மற்றும் துன்பங்களை எதிர்கொண்டு வரும் வேளையிலும், அவர்களின் பணி மகிழ்ச்சி தரும் நற்செய்தி சார்ந்த பணியாக அமைந்துள்ளது என்றும், குறிப்பாக, இச்சூழலில் இப்பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.


உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் இடம்பெற்றுவரும் மோதல்களையும், வன்முறை மற்றும் அநீதியைத் தூண்டும் அதிகார முறைகேடு, பிரச்சாரம் மற்றும் ஆயுத வர்த்தகத்தையும் தனது உரையில் கடுமையாகக் கண்டித்தார் திருத்தந்தை.


துன்ப துயரங்கள் மத்தியிலும் தங்கள் வாழ்விடங்களில் உறுதியான மனதுடன் வாழும் கிழக்கு கிறிஸ்தவர்களின் மீள்தன்மை மற்றும் இறை நம்பிக்கையைப் பாராட்டிய திருத்தந்தை, கடவுளுடன் ஆழமான தொடர்பை கொண்டுள்ள கீழைத் திருஅவைகளின் வளமான ஆன்மிக மரபுகள் மற்றும் வழிபாட்டு முறைகளையும் அவர்களுக்கு எடுத்துக்காட்டினார்


பரந்துவிரிந்துள்ள கத்தோலிக்கத் திருஅவைக்குள், கீழைத் திருஅவைகள் பற்றிய அதிக விழிப்புணர்வு மற்றும் பாராட்டுக்கான அவசியத்தை வலியுறுத்திய திருத்தந்தை, ஒருவருக்கொருவர் மீதான புரிதலையும் ஒன்றிப்பையும் வளர்ப்பதற்கு, கல்வி முயற்சிகள் மற்றும் நெருக்கமான மேய்ப்புப் பணி ஒத்துழைப்பு அவசியம் என்பதையும் வலியுறுத்தினார். - *திருத்தந்தை பதினான்காம் லியோ.*



மூலம் : வத்திக்கான் செய்திகள் (Vatican News)

© 2025 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP